ஒரு காலத்தில் கடவுளாய்த் தெரிந்தவர் இன்று ஏளனம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சோகச்சித்திரம் இது.
குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் குறித்த ஒரு செய்திப்பதிவு மூன்று வாரங்களுக்கு முன்பு எழுதப்பட்டு வரதராஜன் பார்வைக்குப் போயுள்ளது. அதைப் படித்த வரதராஜன் (குமுதம் குழும இதழ்களைத் தனது கட்டுப்பாட்டில் இப்பொழுது வைத்திருப்பவர். ) இதை யார் எழுதியது ? என்று கேட்கவும் ஆசிரியர் கோசல்ராம், ரிப்போர்ட்டர் முருகேசன் எழுதியது என்று சொல்லியிருக்கிறார்.
உடனே வரதராஜன்,இதுக்குப் பதிலா ஆபிஸ் பையனை வச்சு எழுதியிருந்தா சிறப்பா வந்திருந்திருக்கும் என்று ஏளனம் செய்துள்ளார்.அதனை கோசல்ராம் அப்படியே முருகேசனை அழைத்து,உங்களை வைச்சு எழுதுனதுக்குப் பதிலா ஆபிஸ் பையனை வச்சு எழுதியிருக்கலாம் என்று சொன்னவுடன் இரா.முருகேசன்,அப்படியே செய்யுங்க சார்...நான் எதுக்கு இங்க என்று சொல்லியபடி தனது வேலையை விட்டு விலகி விட்டார்.
வேலையை விட்டுச் செல்லும் பொழுது, "அன்று கடவுளாகத் தெரிந்த நான் இன்று மதிப்பில்லாமல் போய் விட்டேன்.நன்றி கெட்ட உலகம்" என்று அலுவலகத்தில் அனைவரிடமும் சொல்லிச் சென்றுள்ளார்..
இரா.முருகேசன் அன்று யாருக்கு கடவுளாய்த் தெரிந்தார் என்று தெரிவதற்கு முன் அவரைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
இரா.முருகேசன் இதற்கு முன் தினமலர்,சென்னை எழும்பூர் நிர்வாக அலுவலகத்தில் ரிப்போர்ட்டராய்ப் பணிபுரிந்தவர்.இவருக்கு திமுக மேல்மட்டத் தொடர்புகள் அனைத்தும் உண்டு.கனிமொழியின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்.
தினமலரில் பணியாற்றிய முருகேசன் அதன்பின் குமுதம் ரிப்போர்ட்டரில் பணிக்குச் சேர்கிறார். இங்கு தி.மு.க. பீட் பார்க்கிறார்.
அந்த சமயத்தில் குமுதம் ஒரிஜினல் முதலாளி ஜவஹர் பழனியப்பனுக்கும், பார்த்தசாரதி மகன் வரதராஜனுக்கும் குமுதம் குழுமச் சொத்து தொடர்பிலான பிரச்சனை முக்கிய கட்டத்தில் இருக்கிறது.கருணாநிதி முதல்வராய் இருந்த சமயம் அது. கருணாநிதி ஜவஹர் பழனியப்பனுக்கு ஆதரவாய் இருக்கிறார்.
குமுதம் தொடர்பான பிரச்சனையில் வரதராஜனுடன் பேச்சுவார்த்தையில், ஹிந்து ராம் உள்ளிட்டோர் ஈடுபட்டும் உரிய சமரச தீர்வு எட்டப்படவில்லை. வரதராஜன் அநியாயமாகப் பிடிவாதம் பிடிக்கிறார். அதனால் ஜவஹர் பழனியப்பன் புகாரின் பேரில் வரதராஜனைக் காவல்துறை கைது செய்கிறது.கைது செய்த பின்பு வரதராஜனை அழைத்துச் சென்ற காவல்துறை அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லாமல் அலைக்கழிக்கிறது. அப்பொழுதைய முதல்வர் கருணாநிதி கவனம் செலுத்திய பிரச்சனை என்பதால் யாரும் இதில் தலையிட யோசிக்கின்றனர்.
வரதராஜனுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க முயற்சி செய்கின்றனர். ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும் அதிகார மட்டத்துடன் தொடர்பு கொள்ளவும், அவர்களிடம் காரியம் சாதிக்கவும் என்றே ஒரு சிலருக்கு நிர்வாகம் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும்.
வரதாரஜனின் குமுதம் ரிப்போர்ட்டர் அலுவலகத்தில் அப்படி இரண்டு பேர் இருந்தனர்.அதில் ஒருவர் கோசல்ராம் அவரால் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை.இன்னொருவரான ஜான் வில்கின்ஸ் பிரச்சனை உருவான பொழுது எட்டியே பார்க்கவில்லை.ஜானுக்கு, வரதராஜன் வட்டாரத்தில் இருந்து இது குறித்து யாரும் போன் செய்தால்,அவர் என் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறதா என்று தான் கேட்டாரே தவிர,வரதராஜனைக் காப்பாற்ற முன் வரவில்லை.வெளியே தலைகாட்டினால் நம்மை ஏதாவது வழக்கில் காவல்துறை கைது செய்துவிடுமோ என்று பயந்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இவர் தான் பதிவில் நாம் கூறியுள்ள இரா.முருகேசன் |
அப்பொழுது தான் செய்தியாளர் இரா.முருகேசன் அவராகவே முன்வந்து தன் 'வேலை'யைத் தொடங்குகிறார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் என்று சொல்லப்படும் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா அவரது தொடர்பில் இருக்கிறார்.அவரை அணுகி அவர் மூலம் மு.க்.ஸ்டாலினை தொடர்பு கொள்கிறார்கள். முதலில் யோசித்த ஸ்டாலின் ஒருவழியாய் இந்த வழக்கில் தலையிடுகிறார்.இன்னொரு புறம் குமுதம் ஜவஹர் பழனியப்பனும் கைது நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று முட்டாள் தனமாய் பின் வாங்குகிறார். அதனால் கருணாநிதி ஒருவழியாய் சமாதானம் ஆகிறார். அதன் பின் வரதராஜன் அலைக்கழிப்பில் இருந்து வெளிக்கொணரப்படுகிறார்.
வரதராஜனின் கைது படலம் சிறை செல்லாமல் முடிவுக்கு வருகிறது.இந்த வழக்கிலிருந்து வரதராஜன் தப்பி விட்டார்.(அன்று ஜவஹர் பழனியப்பன் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்று அவர் தான் குமுதம் முதலாளியாய் இருந்திருப்பார்.பிரச்சனை இழுத்துக் கொண்டு இருந்திருக்காது.)
வரதராஜனின் கைது படலம் சிறை செல்லாமல் முடிவுக்கு வருகிறது.இந்த வழக்கிலிருந்து வரதராஜன் தப்பி விட்டார்.(அன்று ஜவஹர் பழனியப்பன் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்று அவர் தான் குமுதம் முதலாளியாய் இருந்திருப்பார்.பிரச்சனை இழுத்துக் கொண்டு இருந்திருக்காது.)
இதில் பெட்டிச் செய்தி...
குமுதத்தில் அப்பொழுது ஊழியர்கள் முதலாளி ஜவஹர் பழனியப்பனுக்கு ஆதரவாக அதிக அளவிலும், குமுதம் ரிப்போர்ட்டரில் வரதராஜனுக்கு ஆதரவாயும் இருந்தனர்.
வரதராஜன் கைது செய்யப்பட்ட பொழுது குமுதம் குழுமத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிலர் வரதராஜனுக்குத் தங்கள் தார்மீக ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு மாநகரக் காவல்துறை அலுவலகம் சென்றனர்.அதே சமயம் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,கைது செய்யபப்ட்ட வரதராஜனைச் சந்திக்க யார் யார் செல்கிறார்கள் என்பதை அறிவதற்காய் புகைப்படக் காரர் திரு.மத்தியாஸ் என்பவரை அனுப்புகிறார்.
வரதராஜனை அங்கு கண்டதும் அவருக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.அதில் உற்சாகமான ஒரு பத்திரிகையாளர் கம் இலக்கியவாதி லைட்டாக ஒரு டான்ஸ் போட்டதோடு மட்டுமல்லாமல்,விசிலடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். (சமுத்திரம் என்று பொருள்படும் புனைப்பெயரை தனக்குச் சூட்டியுள்ளவர் தான் அவர்.இலக்கிய உலகிலும் அவர் அறியப்படுபவர் தான்.)
இந்த சமயத்தில் ஜவஹர் பழனியப்பன் அனுப்பிய புகைப்படக்காரர் .மத்தியாஸ் அங்கு வந்து சேர்கிறார்.அவர் வந்தவுடன் வரதராஜனுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் இடத்தைக் காலி செய்து ஓட்டம் பிடித்தவர்கள்,குமுதம் அலுவலகம் சென்று தான் நின்றார்கள்.
அதன்பின் வரதராஜன் காவல்துறை பிடியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.சிறைவாசம் தவிர்க்கப்படுகிறது.வெளியில் வந்தவுடன் தனக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்த இரா.முருகேசனை அழைத்து கடவுள் மாதிரி எனக்காக வந்தீர்கள் என்று கையைப்பிடித்து நன்றி சொல்கிறார்.
அதன்பின் தான் மு.க.ஸ்டாலினின் மனைவி எழுதும் தொடர் குமுதம் குழும இதழ்களில் வெளிவருகிறது.இன்று வரை கருணாநிதியை வன்மத்துடன் அணுகும் வரதராஜன் கட்டுப்பாட்டில் இருக்கும் குமுதம் குழும பத்திரிகைகள்,ஸ்டாலினை மென்மையாக அணுகும் காரணம் இதுதான்.(இது இன்னும் எவ்வளவு காலத்துக்கோ...)
இது தான் முருகேசனின் புலம்பலுக்கு காரணம்.
யாருக்கு உதவி செய்கிறோம்,என்ன நோக்கத்திற்கு உதவி செய்கிறோம் என்பதை வைத்துத் தானே அதன் தராதரம் தீர்மானிக்கப்படும்.வரதராஜன் போன்றவர்களின் நியாயமற்ற காரியங்களுக்கு உதவி செய்துவிட்டு இப்பொழுது புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது..?
மேலும் வரதராஜனிடம் நன்றியை எதிர்பார்ப்பது மிகவும் மடமை அல்லவா..?