Friday 21 June 2013

பாரதிராஜா ஏந்தி வரும் விகடன் வீச்சரிவாள்....!



ZEE தமிழ் தொலைக்காட்சியின் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி.

கருத்து வேறுபாட்டாலும் இதரக் காரணங்களாலும் பிரிந்த குடும்பங்களை,கணவன் மனைவியை தங்களது ஆலோசனை மற்றும் அறிவுரை மூலம் மீண்டும் வாழ்வில் இணைத்து வைப்பதாகச் சொல்லுவது தான் இந்த நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சியில் ஒரு நாளில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒரு காட்சி..

வழக்கம் போல் கணவன் மனைவி பஞ்சாயத்து

மனைவி தனது கணவன் குறித்து ஒரு குற்ற‌ச்சாட்டைச் சொல்லுகிறார்.வழக்கம் போல் பாலியல் குற்ற‌ச்சாட்டு.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனைத் தவிர அரங்கத்தில் யாருமில்லை.

மனைவியின் குற்ற‌ச்சாட்டு கடுமையாகிக் கொண்டிருக்க...திடீரென்று அரங்கில் கணவன் ஆவேசமாய் நுழைகின்றான்.

அவன் கையில் செருப்பு.அதனை எடுத்துக் கொண்டு மனைவியை நோக்கி அடிக்க ஓடுகிறான்.

கணவன் செருப்பால் மனைவியை அடிக்கப் போகிறான் என்று பதட்டத்திலும் பரிதவிப்பிலும் பார்வையாளன் அமர்ந்திருக்கும் இருக்கையின் நுனிக்குச் செல்கிறான்.

அடிக்கப் போவதைத் த்டுக்க முடியவில்லையே என்று பச்சாதபத்தில் இருக்கிறான்.

அடிக்கப் போவது பார்வையாளனுக்கு முன் கூட்டியே தெரிவதைப் போல கண்டிப்பாய் அரங்கில் இருப்பவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

உண்மையான சமூக அக்கறை உள்ளவர்கள் என்றால் என்ன செய்வார்கள்..?கணவனைத் தடுப்பார்கள்.மனைவியைப் பாதுகாப்பார்கள்.

ஆனால் இங்கோ தொலைக்காட்சி காமரா,கண‌வன் கையில் ஏந்தியிருக்கும்  செருப்பை பாலோ செய்கிறது.கணவன் கையில் இருக்கும் செருப்பை காம‌ரா zoom செய்கிறது.கண‌வன் மனைவியை செருப்பால் அடித்து துவைக்கிறான்.செருப்பினால் அடிக்கும் பொழுது பல கோண‌த்தில் பதிவு செய்கிறார்கள்.

என்னே 'சமூக அக்கறை'.....!

கணவன்-மனைவியைச் செருப்பினால் அடித்து ஓய்ந்தவுடன் எங்கிருந்தோ அரங்கில் நுழையும் ஆசாமிகள் கணவனைத் தடுக்கிறார்கள்.

ஆக ஆள் இல்லாமல் தடுக்காமல் இருக்கவில்லை.

அடிக்கப் போவது தெரிந்திருக்கிற‌து.அதனால் தான் செருப்பினை zoom  செய்கிறார்கள்.

கணவனைத் தடுக்கப் போதிய பல‌ம் இல்லாமல் இல்லை.ஆனாலும் அடிக்கும் வரை காத்திருந்து,அடித்து முடிந்தவுடன் உள்ளே நுழைந்து காப்பாற்றுகிறார்கள்.

இது தான் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி.இதற்குப் பின்னால் பிரிந்திருக்கும் குடும்பத்தை இணைக்கும் சமூக அக்கறை இருக்கிற‌தாம்.அதனால் அனைத்தையும் ஒளிபரப்பி சமூகத்தின் பார்வைக்கு வைக்கிறார்களாம்.



நிகழ்ச்சியைப் பார்க்கும் நமக்குக் காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிற‌து.

ZEE தமிழ் தொலைக்காட்சி தமிழ்ச் சமூகத்தை இப்படிக் கெடுத்துக் கொண்டிருக்க அதன் பங்குக்குச் சற்றும் குறையாமல் ஒரு பதிவு 'பாரம்பரியமிக்க' ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கிறது.

முழுக்க முழுக்க கேவலமாக திட்டமிட்டு நடத்தப்ப‌டும் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும்,ஓரளவு சிற‌ப்புடன் வெளிவரும் கேள்வி பதில் பகுதியையும் துளியும் ஒப்பிட முடியாது என்றாலும் மணிவண்ணன் குறித்த பாரதிராஜாவின் பதில் பகுதியைப் படித்த நம்மால் அந்தப் பதிலையும் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆ.விகடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பல ஆளுமைகள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு,கூடங்குளம் அணு உலை உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உட்பட பல பிரபல்யங்கள் தங்கள் அனுபவங்களை,சந்தித்த மனிதர்களை,கருத்துக்களை வாசகர்களின் கேள்விகள் வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.(சு.சாமியும் இதில் பங்கெடுத்திருக்கிறார்)

இந்தப் பகுதி குறித்து இதுவரை கடுமையான விமர்சனங்கள் வந்தது இல்லை.

இரண்டு வாரங்களாகத் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.பதில்கள் பெரும்பாலும் ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும் வந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக ஆனந்த விகடன் உட்பட சில பத்திரிகைகளில் வெளிவரும்,நானே கேள்வி-நானே பதில்,வாசகர் கடிதம்,மற்றும் வாசகர்கள் கேள்விகள் போன்றவை மாதிரியான பகுதிகள் அனைத்தும் முழுக்க முழுக்க வாசகர்கள் பங்களிப்புடன் வருபவை அல்ல.

சில உண்மையாகவே வாசகர்களிடமிருந்தும்,சில சமூக அக்கறையுடன் டெஸ்க்கில் நிருபர்களால் உருவாக்கப்ப‌ட்டும்,சில உள்நோக்கத்துடன் திட்டமிட்டும், சில பக்கங்களை நிரப்புவதற்கும் உருவாக்கப்ப‌டுபவை தான்.

பாரதிராஜாவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள் பாரதிராஜாவுக்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்னும் தோற்றத்தில் இருக்கின்றன.அதில் ஒன்று தான் மணிவண்ணன் குறித்துக் கேட்கப்ப‌ட்ட கேள்வியும்.


மணிவண்ணன் எப்பொழுதும் உங்களைக் கடுமையாய் விமர்சிக்கிறாரே என்பது கேள்வி.(19-06-2013 தேதியிட்ட‌ இதழ்)

(சிதம்பரத்தைச் சேர்ந்த எஸ்.குரு என்பவரின் பெயரில் இந்தக் கேள்வி வந்துள்ளது.கேள்வி கேட்ட குரு பாத்திரம் யார் என்பது ஆ.வி.சினிமா ரிப்போர்ட்டர் திருவாரூர் குணாவுக்கே வெளிச்சம்.)

இதற்கு பாரதிராஜாவின் பதில்....

இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக் கட் பண்றேன்... என் முதலாளி கே.ஆர்.ஜி-யும் 
நானும் வேலை விஷயமாக அடிக்கடி ஒரு ஆபீஸுக்குப் போவோம். அங்கே அக்கவுன்ட் 
செக்ஷன்ல வேலை பார்க்கிற ஒரு ஆள் என்னைப் பார்க் கிறப்பலாம் எந்திரிச்சு 
வணக்கம் வைப்பான். நான் அதை ஆச்சர்யமா பார்க்கிறப்ப, 'பாரதி... உன் மேல 
அவன் ரொம்பப் பிரியமா இருக்காம்பா... அதான் வணக்கம் வைக்கிறான்’னு 
சொல்வார் கே.ஆர்.ஜி. 

கொஞ்ச நாளுக்கு அப்புறம் பார்த்தா, அந்த ஆள் யோகாம்பாள் தெருவில் நான் 
குடியிருந்த வாடகை வீட்டு வாசலுக்கு வந்து தினமும் நிக்க 
ஆரம்பிச்சுட்டான். வீட்டு வாசல்ல என்னைப் பார்க்கிறப்பலாம் வணக்கம் 
வைப்பான். இப்படியே ஒரு 15 நாள் போச்சு. ஒரு நாள் அவனை அழைச்சுட்டு வரச் 
சொன்னேன். வந்து உக்காந்தவனுக்கு உயிர் கண்ணுல இருந்தது. எதுவும் கேக்காம 
அவனுக் குக் குடிக்கத் தண்ணியும் கொஞ்சம் டீயும் கொடுக்கச் சொன்னேன். 
குடிச்சான். அவனுக் குள்ள ஏதோ ஒரு திறமை இருக்குன்னு எனக்குள்ள தோணுச்சு. 
'கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அவனை வேலை பார்க்கச் சொன்னேன். அப்போ 
என்கிட்ட இருந்த பலர், 'அவன் மூஞ்சியே சரியில்லையே’னு சொல்வாங்க. 
'போங்கடா... அவன் திறமைசாலிடா’னு 'நிழல்கள்’ படத்துல வசனம் எழுதும் 
பொறுப்பை அவனுக்குக் கொடுத்து, நடிக்கவும்வெச்சேன். அவன்தான் மணிவண்ணன். 


“மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.

ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், ‘அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே’னு சட்டுனு கேட்டுட்டான்.

அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ‘ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா… அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்’னு அவங்க சொன்னாங்க. ஒரு வருஷம் போனது. ‘மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க’னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான்.

‘சரி’ன்னு முடிவெடுத்து, அந்தப் பொண்ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். அப்புறம் ‘காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத்தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன்.

‘நான் தனியாப் படம் டைரக்‌ஷன் பண்ணப்போறேன்’னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.

மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு… வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும்.

ஒரு ராஜா கதை இருக்குமே… வீதில கஷ்டப்பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. ‘இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க’னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க… பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!”

ந்தப் பதிலைப் படித்தால் ஒவ்வொரு வரியும் ஒரு குடிகாரனின் போக்கிரித்தனமான உளறல் போலத் தான் தோன்றுகிற‌து.ஒரு மூத்த படைப்பாளியின் பொறுப்பான பதில் போலத் தோன்றவில்லை.பாரதிராஜா கையாண்ட மொழி நடை உட்பட அனைத்தும் அப்படித்தான் இருக்கின்ற‌ன.

இதில் உச்சகட்ட கேவலமான அவதூறு என்ன தெரியுமா..?

“மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. //

பாரதிராஜா நடந்ததாகச் சொல்லும் இந்தச் சம்பவம்,ஏற‌த்தாழ 30 வருடங்களுக்கு முன்பு.பாரதிராஜாவுக்கு அப்பொழுது தோராயமாக வயது 35 முதல் 40 வரை இருக்கலாம் .

பாரதிராஜா போன்ற தனிப்பட்ட வாழ்க்கையில் 'தரமற்ற‌' ஒருவர் என் கண்காணிப்பில் அந்தப் பொண்ணு இருந்துச்சு என்று சொல்வது,படிப்பவர்களுக்கு எவ்வளவு தவறான பார்வையைத் த‌ரும் என்பது திரைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்குத் தெரியும்.மணிவண்ண‌னை மட்டுமல்ல அந்தப் பெண்ணையும் மிக மோசமாக பாரதிராஜாவின் பதில் இழிவு படுத்துகிறது.

இப்படி நாலாந்தர கழிசடைத்தனமான வார்த்தைகளுடன் பாரதிராஜா பதில் சொல்லியிருக்கிறார்.பாரதிராஜாவின் வார்த்தைகளில் எவ்வளவு வன்மம்.மிக இழிவான தனிப்பட்ட அவதூறு.

பாரதிராஜா என்பவரை ஒரு ஆளுமையாகக் கருதி அவரது அனுபவங்களை,எண்னங்களைப் பதில்களாக்கி விகடன் வாங்கி வெளியிட்டால் அவர் தான் யார் எனத் தனது பதில்களின் மூலம் நிருபித்திருக்கிறார்.

இதில் பாரதிராஜாவை மட்டும்  நாம் குற்ற‌ம் சாட்ட முடியாது.இதனை வெளியிட்ட  ஆனந்த விகடன் தான் அதிகம் குற்ற‌ம் சாட்டப்பட வேண்டிய இதழ்.




பாரதிராஜாவின் அனைத்து உளறல்களுக்கும் ஆ.விகடன் எதற்கு இடம் கொடுக்க வேண்டும்..? அவர் வாந்தி எடுத்தையெல்லாம் தணிக்கை செய்யாமல்வாசகனுக்குப் பரிமாற வேண்டும் என்ற அவசியம் விகடனுக்கு எதற்கு..?

இதே பாரதிராஜா,நாளை ரஜினிகாந்த் குறித்தும் கமலஹாசன் குறித்தும் எதை எழுதினாலும் அதனை ஆனந்த விகடன் தணிக்கையின்றி வெளியிடுமா..? அதற்குத் துணிவு இருக்கிற‌தா..?

இவ்வளவு ஏன் இந்த வாரம் ஒரு கேள்வி- பதிலில் விஜயகாந்த் குறித்தும்,சீமான் குறித்தும் பாரதிராஜா குற்றம் சாட்டியிருக்கிறார்.ஆனால் அவர்களது பெயரைக் கவனமாகக் கத்தரி போட்டு விட்டதே..?

ஏன் மணிவண்னன் பின்பு கோஷம் போடவும், கொடி பிடிக்கவும், விகடன் அலுவலகத்திற்கு போன் செய்து திட்டவும் நான்கு பேர் இல்லை என்பதாலா..?

பாரதிராஜா குறித்து உண்மையாகவும் நேர்மையாகவும் விமர்சிக்க எத்தனையோ துணை,இளம் இயக்குனர்கள் இருக்கிறார்கள்.அவர்களைப் பேட்டி கண்டு அப்படியே வெளியிட விகடனுக்குத் துணிச்சல் உண்டா..?

துணிந்து சொல்லலாம் விகடனுக்குத் துணிவிருக்காது என்று.

இந்த லட்சணத்தில் மணிவண்ண‌ன் இறந்த பின்பு அவரைப் புகழ்ந்து இந்த இதழில் (26-06-2013 தேதியிட்ட இதழ்) 2 பக்க மேட்டர் .அதற்கு சத்யராஜ் பங்களிப்பு செய்திருக்கிறார்.பாரதிராஜாவின் கேவலமான ப்தில் மணிவண்ணனை உளவியல் ரீதியில் நெருக்கடிக்கு கொண்டு சென்றிருக்கிறது.அவர் இறந்த பின்பாவது,அதற்கு போகிற போக்கில் ஒரு வருத்த‌ம் கூடத் தெரிவிக்காமல் பாராட்டு கட்டுரை இரண்டு பக்கம்.

(பாரதிராஜாவின் சாக்கடை பதில்,இரு நாட்களில் மணிவண்ண‌ன் மரணம்,என நிகழ்ந்ததனால் இந்த விஷயத்தில் ஆ.வி.அடுத்த இதழில் எதும் துளி வருத்தமாவது வெளியிடுமோ என்று எதிர்பார்த்தோம்.அதனால் தான் தாமதமான இந்தப் பதிவு)


சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் உலகமறிய கணவனிடம் செருப்பால் அடிவாங்கிய அந்த பரிதாபத்திற்குரிய பெண் இன்று எங்கிருக்கிறார் என்று நமக்குத் தெரியாது.ஒருவேளை கணவணே கண் கண்ட தெய்வம் என்று அவனுடன் வேறு வழியின்றி இணைந்து வாழ்ந்து கொன்டிருக்கலாம்.அல்லது உயிருடன் அனுதினமும் செத்துக் கொண்டிருக்கலாம்.அல்லது அவனுடன் வாழ்வதை விடச் சாவதே மேல் என முடிவெடுத்திருக்கலாம்.அல்லது கணவனைத் தூக்கி எறிந்து விட்டு மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்..

ஆனால் பாரதிராஜா ஆனந்த விகடன் இதழ் பதில் மூலம் மணிவண்னனை நோக்கி வீசிய அவதூறு மற்றும் தரம் தாழ்ந்த விமர்சனம் என்னும் வீச்சரிவாள் அவரைப் பதம் பார்த்து விட்டது.தடுக்க வேண்டிய ஆனந்த விகடனோ எதுவும் செய்யாமல் பாரதிராஜா என்னும் 'ஆளுமை'யைப் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிற‌து.

சொல்லாத சொல்லுக்கு நீ எஜமான்..
சொன்ன சொல்லோ உனக்கு எஜமான்...

பாரதிராஜா போன்ற நபர்கள் கண்டிப்பாய் இந்தப் பழமொழியைக் கடைப்பிடிக்க என்றும் வாய்ப்பு இல்லை.

நாம் ஆனந்த விகடன் இதழைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறோம்.அதனால் ஆ.விகடன் கடைப்பிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வும் கடமையும்  இருக்கிறது.

No comments: