Thursday 1 November 2012

வாசகர்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கிய ஆனந்த விகடன்...!




பொதுவாக தீபாவளி, தைத் திருநாள் போன்ற விடுமுறை நாட்களில் நேர்மையான வணிக நிறுவனங்கள் தங்கள் பொருட்களை அதுவரை விற்பனை செய்து வந்த விலையை விட சற்றுக் குறைந்த விலையில் விற்பனை செய்வர்.பொருட்கள் அதிகம் விற்பனை ஆகும் என்பதும் மற்றும் இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து தொடர்ந்து தம்மிடையே தக்க வைக்கலாம் என்பதும் காரணம் ஆகும்.

சில  நிறுவனங்கள்,வழக்கமான விலையை விட கூடுதலாக நிர்ணயம் செய்து விட்டு தள்ளுபடி செய்வது போல் ஏமாற்றி பழைய விலைக்கே விற்பதும் உண்டு. வாங்குபவர்களை ஏமாளியாகவும் தங்களை அறிவாளியாகவும் கருதுவது தான் இதற்குக் காரணம்.

ஆனால் இன்னும் சில 'துணிச்சலான' மோசடி நிறுவனங்கள் இருக்கின்றன.

வழக்கமான விலையை விடவும் அதிக விலைக்கு  பகிரங்கமாக விற்பனை செய்வர்.தரமும் குறைவாக இருக்கும். இந்த கூட்டத்தில் தங்கள் அயோக்கியத்தனத்தை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற தெனாவட்டும்  நம்மை யார் கேள்வி கேட்பது என்ற ’துணிச்சலும்’,அதற்குக் காரணம் ஆகும்.

இந்த வாரம் அப்படி ஒரு நிறுவனத்தைப் பார்ப்போம்.


வாசன் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்டில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடன் தான் துணிச்சலுடன் வாசகர்களின் பர்ஸில் கைவைத்திருக்கிறது.



இந்த வார ஆனந்த விகடன் விலை ரூ.25  வழக்கமான இதழை விட அதிக பக்கங்களாம்.
ஏன் என்று கடைக்காரரிடம் கேட்டால் தீபாவளி சிறப்பிதழ் என்று பதில் வருகிறது. தீபாவளி சிறப்பிதழ் என்றால் விலையைக் குறைக்கத் தானே வேண்டும்,எதற்கு உயர்த்தினார்கள் என்று கேள்வி எழுகிறது.

வழக்கமான இதழுக்கும் இந்த இதழுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை. திரைப்படத் துறை சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகள்,செய்திகள்,புகைப்படங்கள் தான் கூடுதலாக இடம் பெற்றிருக்கிறது..ஆனால் சிறப்பிதழ் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு விளம்பரங்கள் அள்ளிக் குவித்திருக்கின்றனர்.

வழக்கமான விளம்பர அளவை விட அதிக அளவில் வாங்கிக் குவித்திருக்கின்றனர்.சரி விளம்பரங்களின் மூலம் சில லட்சங்களை கூடுதலாக ஈட்டுகின்றார்களே போதாதா..?விலையையும் அதிகமாய் ஏற்றி நம்மிடம் பிடுங்கியுள்ளனர். 

எவ்வளவு அதிகம் பிடுங்கியுள்ளனர் என்பதை பழைய ஆனந்த விகடன் விலையுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

19-09-2012 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்ப்போம்.

மொத்தம் -116 பக்கங்கள்

விளம்பரங்கள் - 22 பக்கங்கள்

விளம்பரங்கள் தவிர்த்து ஆ.விகடன் -9494(494பக்கங்கள் 94

விலை-ரூ.17

தோராயமாக ஒரு பக்கத்தின் விலை(தயாரிப்பு மற்றும் லாபம் உட்பட)

0.18 பைசா.(ரூபாய் 17 % 94 பக்கங்கள்)

(இவர்கள் லட்சக்கணக்கில் காசு வாங்கிக் கொண்டு வெளியிடும் விளம்பரத்திற்கு நாம் ஏன் காசு கொடுக்க வேண்டும்.?இதை விட இதழுக்கான 'மதிப்பை' வரையறை செய்ய வேறு வழிமுறை இருந்தால் வாசகர்கள் நமக்கு அனுப்பலாம்.)

பொதுவாக பிற இதழ்களுடன் ஒப்பிடும் பொழுது ஆ.விகடன் விலை மிக அதிகம் என்பது உண்மை. இதனை நாம் பிறிதொரு பதிவில் பார்ப்போம்.ஆனாலும் நாம் இப்பொழுது இதனை ஒப்பீட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்வோம்.

இந்த தீபாவளி சிறப்பிதழ்

07-11-2012 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்ப்போம்.

அதில் மொத்தம் -180 பக்கங்கள்

விளம்பரங்கள் – 55 பக்கங்கள்

விளம்பரங்கள் தவிர்த்து ஆ.விகடன் 125 பக்கங்கள்.

மேற்கண்ட கணக்கீட்டின் படி ஆ.விகடன் தீபாவளி சிறப்பிதழ்,என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்க வேண்டும்..?

125 பக்கங்கள்@ 0.18 = ரூ. 22.50 தான் நிர்ணயம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சொல்லப் போனால் இன்னும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஏன் என்றால் விளம்பரக் கட்டணம் ஆனந்த விகடனில் தீபாவளி சமயத்தில் அதிகம்.அந்த வருமானமும் அதிகம் வந்திருக்கும்.மேலும் தீபாவளிக்காய் அதிக பிரதிகள் அச்சிடும் பொழுது தயாரிப்புச் செலவும் வழக்கத்தை விடக் குறைவாகத் தான் வந்திருக்கும்.ஆனால் விகடன் விலை என்ன தெரியுமா..?

ரூ.25

இதழ் ஒன்றுக்கு 2.50 காசுகள் கூடுதலாய் விலை வைக்கப் பட்டிருக்கிறது.தோராயமாய் தீபாவளியில் 6 லட்சம் பிரதிகள் இந்த இதழ் ஆ. விகடன் விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்று வைத்துக் கொண்டாலும் 15 லட்சம் ரூபாய் வாசகனிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.




இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..?

காசு கொடுத்துப் படிக்கும் வாசகனை ஏமாளி என்று நினைத்து இது போன்ற மோசடியில் வாசன் பப்ளிகேஷன் (பி) லிமிடெட் ஈடுபட்டிருக்கிறது. இவர்கள் தான் ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள்.



(ஆனால் இதே சமயம் சக போட்டி இதழான குமுதம் தீபாவளி சிறப்பிதழ் என்ற தலைப்பில் 3 இதழ்களை அதே விலையில்வெளியிட்டு  விற்பனை செய்துள்ளது.குமுதத்தை போட்டியாக கருதும் ஆ. விகடன் இது போன்ற விஷயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.)

தீபாவளியின் பொழுது தன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கூடுதல் விலை வைத்துக் கொள்ளையடிக்கும் நிறுவனங்கள் பிறருக்கு அறிவுரை சொல்வதில்லை.அறம் போதிப்பதில்லை.ஆனால் விகடன் அதைச் செய்கிறது.இதைப் பார்த்தால் அவர்களை விட இவர்கள் ஏமாற்று எவ்வளவு மோசமானது என்று விளங்கும்.

விகடனில் சில வருடங்களுக்கு முன் கன்ஸ்யூமர் கதைகள் என்ற தலைப்பில் நுகர்வோர் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்று தேசிகன் தொடர் எழுதினார். ஆ.விகடன் மோசடிகளை அம்பலப்படுத்தினால் மட்டும் போதாது.

தனது நிறுவனத் தயாரிப்புகளில் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.





4 comments:

ramalingam said...

இதையெல்லாம் வெளிப்படுத்துவதால்தான் இணயத்தின் மேல் இவர்களுக்கு ஒரு காண்டு.

Anonymous said...

This is my long time habit to count the no of pages of advertisement , whenever I buy a magazine. Sometimes I noticed that the advertisement goes to 30-40% of the total pages. We are long way to go to question the media mafias??????????

elam1685 said...

நான் சொல்லணும்ன்னு இருந்தேன்...நீங்க சொல்லிட்டீங்க...இந்த இதழுடன் நான் அந்த பத்திரிக்கையை நிறுத்தப்போகிறேன்.

silviamary.blogspot.in said...

நானும் இதை உணர்ந்தேன். அதுவும் தொடர்ச்சியாக 12 பக்கங்களுக்கு லலிதா ஜுவல்லரியின் விளம்பரம்! இலவச இணைப்பு என்று எதைத் தருகிறார்கள் என்றால் 16 பக்கங்களுக்கு சென்னை சில்க்ஸின் விளம்பரம்! ஆனந்த விகடனின் லாபவெறி சகித்துக் கொள்ள முடியாதபடி தான் போய்க் கொண்டிருக்கிறது... தீபாவளி சிறப்பிதழ் என்று ஏதாவது புதிதாய்த் தருகிறார்களா என்றால்,அதுவுமில்லை. வழக்கமான பகுதிகள் தான். கொஞ்சம் கவிதைகள் மட்டும் தான் சிலரிடம் அதிகப் படியாக வாங்கிப் போட்டிருக்கிறார்கள்! ஆனால் என்ன செய்வதென்றும் தெரியவில்லை;வாங்காமல் புறக்கணிக்கவும் முடிவதில்லை.... தமிழில் வருகிற குப்பைப் பத்திரிக்கைக் கூளங்களுக்குள் ஆ.வி. மட்டும் தானே கொஞ்சத்திற்குக் கொஞ்சமாச்சும் சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.....